புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை மைய இயக்குனர் தகவல்

இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-23 07:49 GMT
சென்னை,

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். 

அதே சமயம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்