மதுராந்தகம் ஏரியிலிருந்து வினாடிக்கு 29,500 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றம்

மதுராந்தகம் ஏரியை ஒட்டியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-11-28 03:39 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். உத்திரமேரூர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள நீர் வரத்து மூலம் மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. 

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. இதையடுத்து தானியங்கி மடகுகள் மூலம் 27 ஆயிரம் கன அடி தண்ணீரும், அவசர கால மதகுகள் மூலம் 2,300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து மொத்தம் 29,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஏரியை ஒட்டியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்