பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம்: சாக்குமூட்டையில் கட்டி வைத்த பச்சிளம் குழந்தை சாவு பாட்டி கைது

பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-28 21:42 GMT
சேலம்,

சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெண் பார்க்க வந்தார். அந்த பெண்ணுக்கு அப்போது 19 வயதே ஆகி இருந்த நிலையில் அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

இருப்பினும் பெண் பார்க்க வந்த இடத்திலேயே சதீஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

இதில் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இது அவரது பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. அந்த பெண்ணும் வீட்டிற்கு தெரியாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் நிறைமாதத்தை எட்டியபோதுதான் தங்கள் மகள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவரது பெற்றோர் அறிந்துள்ளனர்.

அழகான ஆண் குழந்தை

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் அந்த இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து அந்த பச்சிளம் குழந்தையின் பாட்டி தனது மனதை கல்லாக்கி கொண்டு அந்த குழந்தையை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி மாட்டுத்தொழுவத்தில் வைத்தார். பின்னர் மகளை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அழைத்து சென்றார்.

சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை எங்கே என்று கேட்ட போது வீட்டில் இருப்பதாக அந்த குழந்தையின் பாட்டி பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் குழந்தையை கொண்டு வாருங்கள் இல்லையேல் போலீசுக்கு தகவல் தெரிவிப்போம் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து அவர் தனது மகளின் குழந்தையை மாட்டுத்தொழுவத்தில் சாக்குமூட்டையில் கட்டி வைத்த கொடூரத்தை கூறியுள்ளார். பின்னர் அந்த குழந்தையை தூக்கிகொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.

பாட்டி கைது

இதனிடையே சம்பவம் தொடர்பாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிறந்த பச்சிளம் குழந்தையை முறையாக பராமரிக்காத குற்றப்பிரிவின் கீழ் அந்த பாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்