இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன், மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து மதுகுடித்த கணவனால் மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-29 10:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாது. டிரைவரான இவருக்கும் கிருஷ்ணகிரி அருகே உள்ள மஹாராஜாக்கடை பகுதியைச் சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு யோகாஸ்ரீ (7) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கணவர் மாது மற்றும் தீபா ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீபா வேலைக்குச் சென்றுவர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை மாது அடகு வைத்து, அந்த பணத்தை குடியில் செலவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தீபா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தை யோகாஸ்ரீயுடன் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்தூர் காவல் நிலையதிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த தாய் மகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்