உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை தள்ளுபடி செய்யவேண்டும் மத்திய மந்திரிக்கு, அமைச்சர் பொன்முடி கடிதம்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை தள்ளுபடி செய்யவேண்டும் மத்திய மந்திரிக்கு, அமைச்சர் பொன்முடி கடிதம்.

Update: 2021-12-02 19:06 GMT
சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதம் என்ற அளவில் தமிழ்நாடு இருக்கிறது. கலை, அறிவியல், என்ஜினீயரிங், சட்டம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் 35 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பலத்துடன் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது.

மாணவர்களுக்கு சமமான மற்றும் உயர்தர கல்வியை அவர்கள் அடைவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எந்த ஒரு சரக்கு சேவை வரியையும் மாணவர்களுக்கு விதிப்பது மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கும், இடைநிற்றல் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இது ஆர்வமுள்ள மாணவர்களின் கல்வி வாழ்க்கையை பாதிக்கும்.

சரக்கு சேவை வரிவிதிப்பு, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை மோசமாக பாதிப்பதோடு, கூடுதல் நிதிச்சுமை காரணமாக பெற்றோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

எனவே தயவு செய்து பரிசீலித்து மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சரக்கு சேவை வரியை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்