கடினமான சூழலில் உறுதுணையாக இருந்ததற்கு முதல்-அமைச்சருக்கு ராணுவம் நன்றி

கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு மனமார்ந்த நன்றி என முதல்-அமைச்சருக்கு ராணுவம் நன்றி தெரிவித்து உள்ளது.

Update: 2021-12-12 23:56 GMT

சென்னை,

சென்னை தக்ஷின் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினென்ட் ஜெனரல் அருண் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், நம் ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த உடன், தாங்கள் விரைந்து வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் இடம்பிடித்து விட்டீர்கள்.

அந்த தருணத்தில் எந்தெந்த உதவிகள் முடியுமோ, அந்த உதவிகளை எல்லாம் தங்கள் தலைமையின் கீழ் உள்ள தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது.  இதுபோன்ற ஆதரவுதான், எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர்வதற்கும், ராணுவ உடை அணிவதற்கு உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

உங்கள் செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும், தமிழக அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தி ஊக்கத்தை அளிக்கிறது.

இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும், நம் மாநிலத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்