கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

Update: 2022-01-03 20:01 GMT
சென்னை,

2022-ம் ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்க இருக்கிறது. ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இக்கூட்டத்தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

இந்தநிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு நேற்று சென்ற சபாநாயகர் அப்பாவு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து, இந்த ஆண்டு நடைபெற உள்ள முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட சபாநாயகர் கூறியதாவது:-

காகிதம் இல்லாத பட்ஜெட்

சட்டசபைக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் தற்போதைய கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் சட்டசபைக்குள் நுழைய அடையாள அட்டை வழங்குவோம். கடந்த ஆண்டை போல் காகிதம் இல்லாத பட்ஜெட் இந்த ஆண்டும் தொடரும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அவையை நடத்த நல்ல ஒத்துழைப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் முதல்-அமைச்சர் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமது சட்டசபை உறுப்பினர்களை பேச வைக்கிறார்.

கவர்னர் பாராட்டு

கவர்னரை நாங்கள் சந்தித்தபோதுகூட அவர் எங்களிடம், முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், அதற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவராகவும் இருக்கிறார் என்றும், அதிசக்தி வாய்ந்த முதல்-அமைச்சராக உள்ளார் என்றும் குறிப்பிட்டார். ஏனென்றால் முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளை அவர் பார்க்கிறார்.

இதற்கு மேல் கவர்னர், முதல்-அமைச்சர் உறவுக்கு வேறு என்ன வேண்டும்? சட்டத்துக்கு உட்பட்டு, ஜனநாயக முறைப்படி சட்டசபை நடக்கும். சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்