இலங்கை சிறையில் இருக்கும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் இருந்து வரும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-01-07 22:03 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இலங்கை சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதியில் இருந்து இலங்கை சிறையில் இருந்து வரும் 56 மீனவர்களை விடுவித்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை

இலங்கை அரசின் வசம் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான அவர்களது வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களும் பொங்கல் பண்டிகையின்போது தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். அதற்குரிய உயர்நிலை பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசுடன் நடத்திட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்