391 பேருக்கு வேளாண்மைத்துறையில் பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மைத்துறையில் உதவி அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 391 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-01-12 22:58 GMT
சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை-உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணி நியமனம்

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக இந்த துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர் மற்றும் 230 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக 5 உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், 5 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் இரா.பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்