ஒரே குடும்பத்தைச் சேர்ந்த3 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குட்டை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் சு.கம்பம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாபூஸ்கான் (வயது34) தில்ஷாத் (வயது 30 ) இவர்களுக்கு நஸ்ரின் (வயது 15) நசீமா (வயது 15) ஷாகிரா (வயது12) ஷபரின் வயது10) பரிதா (வயது 8) 5 குழந்தைகள் உள்ளனர்.
மாபூஸ்கான் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள குட்டையில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கழுவுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியிலுள்ள தண்ணீரில் மூழ்கி நஸ்ரின், நசீமா.ஷாகிரா மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதில் நஸ்ரின், நசீமா சு.வாழவெட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் ஷாகிரா வெறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து வெறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் குழந்தைகள் மூழ்கி உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.