பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற மர்மநபர்கள்
வில்லியனூர் அருகே பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற மர்மநபர்களை பிடிக்க சென்ற ஊழியரின் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர் அருகே பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற மர்மநபர்களை பிடிக்க சென்ற ஊழியரின் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் பங்க்
புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). இவர் வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையில் உள்ள அரசு மார்க்கெட் கமிட்டிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் ரூ.150-க்கு பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர். பெட்ரோல் நிரப்பி விட்டு ராஜ்குமார் பணம் கேட்டபோது, அவர்கள் பணத்தை கொடுக்காமல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.
மோட்டார் சைக்கிள் பறிப்பு
புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர்கள் 2 பேரும் ராஜ்குமாரை மறித்து மோட்டார் சைக்கிளையும் பறித்து சென்றனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.