நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-17 21:29 GMT
சென்னை,

தமிழகத்தில் தற்போது பல மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

விரைவில் தேர்தல்

இந்த நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல் கட்ட இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாணை வெளியீடு

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி நிர்வாக இயக்குனர் 11-ந் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார். அவரது கருத்துருவை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது.

சென்னை, தாம்பரம்

அதன்படி, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இடஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கு வழங்கப்படுகிறது.

9 மாவட்டங்கள்

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சீபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்