கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்

கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். நகைக்காக அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-01-25 17:43 GMT
கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். நகைக்காக அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவாடு விற்கும் பெண்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள துலுக்காநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாவு (வயது 63). இவருடைய மனைவி முத்தம்மாள் (55). கருவாடு விற்கும் தொழில் செய்து வந்தார்.
கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து கருவாடு விற்பதற்காக முத்தம்மாள் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
கரும்பு தோட்டத்தில் பிணம்
இது பற்றி கண்டமங்கலம் போலீசில் முத்தம்மாள் மகன் ராஜீவ்காந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தம்மாளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கண்டமங்கலம் அருகே உள்ள பாக்கம் முத்தாலம்மன் கோவில் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
நகைக்காக கொலை?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் குறித்து விசாரித்தபோது, அவர் காணாமல் போன முத்தம்மாள் என்பது தெரியவந்தது. கருவாடு விற்பனை செய்ய செல்லும்போது கழுத்தில் தங்க சங்கிலி, கம்மல், மூக்குத்தி, மோதிரம் ஆகியவை அணிந்திருந்தார். இந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு மர்ம முத்தம்மாளை அடித்து கொலை செய்து, உடலை கரும்பு தோட்டத்தில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்