தேசிய திறனாய்வு தேர்வு; 9-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-01-26 08:48 GMT
சென்னை,

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. அதன்மூலம், 1 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள் ஆவர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, 2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2022 மார்ச் மாதம் 05-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

மேலும், இதுபற்றிய கூடுதல் விவரங்களை http://www.dge.tn.gov.in/ மற்றும் https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1641974422.pdf  ஆகிய இணையதளங்களின்  வாயிலாக அறியலாம். 

மேலும் செய்திகள்