தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை: மேலும் 5 பயணவழி ஓட்டல்களில் அரசு பஸ்கள் நிற்க தடை

தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பயணவழி ஓட்டல்களில் அரசு பஸ்கள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-26 18:58 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சேலம் ஸ்டார் அசோசியேட்ஸ் என்ற ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் (மோட்டல்) உணவின் தரம் குறைவாகவும், அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் போக்குவரத்து துறைக்கு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட உணவகம்-கடைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர். இதில் உணவுகள் தரமில்லாமல் இருப்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பஸ்கள் நிற்க தடை

இதையடுத்து மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டி அருகே தரமில்லாத உணவு மற்றும் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்ற மேலும் 5 உணவகங்களில் பஸ்கள் நிற்க தடை விதித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேலும் 5 ஓட்டல்களில்...

கடந்த 25-ந்தேதி பொதுமக்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, மாமண்டூர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவது கண்டறியப்பட்டு, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்த தடை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் குழு, போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்கள் சுகாதாரமற்ற உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின்போது கண்டறியப்பட்டது. மேற்கண்ட உணவகங்களில் அரசு பஸ்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்