போதை பழக்கத்தால் விபரீதம் தந்தையை குத்திக்கொன்ற மகன்

சென்னை சூளைமேட்டில் தந்தையை குத்திக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். போதைப்பழக்கத்தால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்து விட்டது.

Update: 2022-03-17 18:58 GMT
சென்னை,

சென்னை சூளைமேடு, வீரபாண்டி நகர் 1-வது தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 52). தையல்காரர். இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் நித்தியானந்தன் (29). ஏ.சி. மெக்கானிக்காக உள்ளார். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதை செல்வம் கண்டிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த நித்தியானந்தன், வழக்கம்போல தந்தை செல்வத்துடன் சண்டை போட்டார். ஆனால் சற்றும் எதிர்பாராமல் தந்தை என்றும் பாராமல் செல்வத்தை, நித்தியானந்தன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பரிதாப சாவு

கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த செல்வம், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நித்தியானந்தன் கைது செய்யப்பட்டார். பொல்லாத குடிப்பழக்கத்தால், தந்தை கொலையானார். மகன் சிறைக்கு போனார்.

மேலும் செய்திகள்