சென்னை: "வாட்ஸ் ஆப்" குரூப் மூலம் கஞ்சா சப்ளை - 4 பேர் கைது...!
சென்னை அருகே வாட்ஸ் ஆப் குரூப் மூலம் கஞ்சா சப்ளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்,
சென்னை கோயம்பேடு வரலட்சுமி நகரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது வானகரம் பகுதியை சேர்ந்த அவினாஷ் (26) என்பது தெரியவந்தது.
அவினாஷிடம் நடத்திய விசாரணையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வரவழைத்து அதை தண்டையார்பேட்டையில் உள்ள நண்பர் கமல் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து சிறிய பொட்டலங்கள் போட்டு "வாட்ஸ் ஆப்" குரூப் மூலம் ஆர்டர் பெற்று நூதன முறையில் சென்னை முழுவதும் மோட்டார் சைக்கிளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவினாஷ் அவரது நண்பர்களான கமல், பிரித்விராஜ்,பரத்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.