இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? - வெளியான முக்கிய தகவல்
பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. ரூ.2 ஆயிரம் வழங்கலாமா? அல்லது ரூ.3 ஆயிரம் வழங்கலாமா?, நிதி எவ்வளவு தேவைப்படுகிறது? என்று அரசு கணக்கிட்டு வருகிறது. இன்றோ, நாளையோ ரொக்கப் பணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2025-ல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்
2025-ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025-ம் ஆண்டு 20,471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கூகுள் பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைபடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
"விஜய் இவர்களை சமாளித்தாலே அரசியலில் ஜெயிச்சிடுவாரு"- எச்.வினோத் கருத்து
விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது. "முட்டாள்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது. எது கெட்டது என தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு நல்லது, கெட்டது தெரியும்.
அறிவாளி அயோக்கியர்கள், எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த 4 வகை மனிதர்களை சமாளித்தாலே போதும், விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார்னு நம்புறேன்.." என எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம், குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.256-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இன்று புத்தாண்டு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து, இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.