திருச்சி அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி..!

திருச்சி அருகே 3 வயது குழந்தை லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-23 05:00 GMT
திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (32). இந்த தம்பதியினருக்கு லித்திஸ் என்கிற 3 வயது குழந்தையும், ஒரு கை குழந்தை ஒன்றும் உள்ளது. 

இந்நிலையில் இன்று காலை சுரேஷ் தனது மகனான லித்திஸ் உடன் காளிப்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சேலம் மாவட்டம் பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரியின் பின் சக்கரத்தில் நிலைதடுமாறி சுரேசும், அவரது 3 வயது மகனும் விழுந்துள்ளனர். 

இதில் லாரியின் பின் சக்கரத்தில் லித்திஸ் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றிய துறையூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, லாரி டிரைவர் சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (50) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

துறையூர் அருகே 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்