கச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் மீண்டும் ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றலாம் கி.வீரமணி அறிக்கை

கச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் மீண்டும் ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றலாம் கி.வீரமணி அறிக்கை.

Update: 2022-05-03 22:14 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:-

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு பெரும் கொடுமைகள் செய்திருந்தும், அவற்றை எல்லாம் மறந்து, அந்நாடு பொருளாதாரத்தில் நலிவுற்றுத் தத்தளிக்கும் இந்த காலகட்டத்தில், மனிதாபிமானத்தோடு உதவி செய்து வருகிறோம். இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம், குறிப்பாக ராமேசுவரம் மற்றும் கடற்பகுதி மீனவ சகோதரர்களின் வாழ்வுரிமை, மீன் பிடி உரிமையைக் காத்து, நிம்மதியான வாழ்வைத் தருவதற்கு, முன்பு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவினை மீண்டும் மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், மீண்டும் ஒரு சிறப்பு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, புதிய சூழ்நிலையில் வற்புறுத்தி, நியாயம் கேட்டால், நல்லுறவு வலுப்பட்டு, நல்ல புரிதல் ஏற்பட ஒரு நல்ல அறிகுறி சமிக்கையாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளுக்கும் பெருமை சேர்க்கும்.

* மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பட்டினப்பிரவேசம் 55 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகத்தின் முயற்சியால், போராட்ட அறிவிப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இப்போது ஆதீனமாக பட்டம் சூட்டிக்கொண்டவர் பல்லக்கு சவாரிக்கு ஆசைப்படலாமா? தமிழக அரசு இத்தகைய சவாரிகளை நிரந்தரமாக தடை செய்ய ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்