நூதன முறையில் தங்கம் கடத்தல்; சென்னை விமான நிலையத்தில் பயணி கைது
சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை,
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை சுங்க இலாகா துறையை சேர்ந்த விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் அவரிடம் வெள்ளி முலாம் பூசிய சிறிதும், பெரிதும் என நட்டு, போல்டுகளை கழற்றி சரி செய்ய உதவும், 6 ஸ்பேனர்கள் இருந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் உண்மையில் 24 காரட் தங்கம் என தெரிய வந்துள்ளது.
அவற்றின் எடை 1.020 கிலோ இருந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.47.56 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.