வாகனங்கள் ‘ஜி', ‘அ' என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ‘ஜி', ‘அ' என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Update: 2022-05-11 18:50 GMT
கோப்புப்படம்
சென்னை, 

அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ‘ஜி', ‘அ' என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்போது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட்) ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்துகள் எழுதப்பட்டோ அல்லது ‘ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (கே)-ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்துகளை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்