டிஜிட்டல் காயின் நிறுவன நிர்வாகிகளிடம் 2- வது நாளாக விசாரணை

பல கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக டிஜிட்டல் காயின் நிறுவன நிர்வாகிகளிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-09-19 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவரிடம், ஓசூர் ராமகிருஷ்ணாநகர் அருண்குமார் மற்றும் நந்தகுமார், சங்கர், பிரகாஷ், சீனிவாசன், வேலன் ஆகிய 6 பேர் டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. இதை நம்பி பிரகாஷ் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீடு செய்த சில நாட்களில் மட்டும் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரித்த போது, அந்த 6 பேரும் பிரகாசை போன்று ஏராளமானவர்களிடம் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பிரகாஷ் உள்ளிட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் டிஜிட்டல் காயின் நிறுவன நிர்வாகிகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்