குருபகவானுக்கு 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா
குருபகவானுக்கு 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா;
நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது. குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு கடந்த 22-ந்தேதி பெயர்ச்சி அடைந்ததையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.
குருபெயர்ச்சிக்குப்பின் 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா இன்று( வியாழக்கிழமை) தொடங்கி வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 400. குருபகவான் உருவம் பதித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை இணை ஆணையர் ராமு உத்தரவின் பேரில் உதவி ஆணையர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.