மேலும் 3 பேர் சிக்கினர்

திருட்டு வாகனங்களை விற்று மோசடி செய்த வழக்கில் மேலும் 3 பேர் சிக்கினர்.

Update: 2023-09-03 00:30 GMT

மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம். இவர், தனது கூட்டாளிகளான முருகன், ஆனந்தன், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோருடன் சேர்ந்து திருட்டு வாகனங்களின் பதிவெண்ணை மாற்றி, போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை இணையதளம் மூலம் விற்று மோசடி செய்து வந்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த மதன்ராஜ் என்பவரிடம் காரையும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அயோத்திராமன் என்பவரிடம் டிராக்டரையும் விற்று மோசடி செய்தனர். அவர்கள் 2 பேரையும் ஆண்டிப்பட்டி பகுதிக்கு வரவழைத்து, அன்புச்செல்வம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து 2 பேரும், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார்கள் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து அன்புச்செல்வம், முருகன், ஆனந்தன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் மாரிமுத்து உள்பட 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி கும்பல் ஒரு கார், 4 டிராக்டர், ஒரு பொக்லைன் எந்திரத்தை இதுபோன்று விற்று மோசடி செய்தது தெரியவந்தது. எனவே பொதுமக்கள் இணையதளத்தில் வரும் விளம்பரங்களை பார்த்து வாகனங்களை வாங்குவதற்கு முன்பு அவற்றின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோன்று ஏமாற வேண்டாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்