கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
ஆரணியில் கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஆரணியில் கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்களில் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதேபோல ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்றனர்.
மேலும் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.
கோவில்களில் தொடர் திருட்டை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
இதனையடுத்து தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், வேலூர் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), 17 வயது சிறுவன் மற்றும் வந்தவாசியை அடுத்த கீழ்கொவளைவேடு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (22) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் தனுஷ், பிரபுதேவா ஆகியோரை வேலூர் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.