ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு மத்திய அரசு ஊழியர் பலி

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் பலியானார்.

Update: 2023-07-26 04:42 GMT

ஆவடி,

ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா நகர் ரெட்டியார் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 69). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான படை உடை தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர் தினந்தோறும் ரெயில் நிலையம் ஒட்டியுள்ள சாலையில் நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை இவர், ஆவடி-இந்து கல்லூரி ரெயில் நிலையங்களுக்கிடையே நடைபயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கடம்பத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (50). கூலி தொழிலாளி. கடந்த 12-ந் தேதியன்று ரமேஷ் தன் வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. அவரை வீட்டார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்