தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை

தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-10-01 20:11 GMT

தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருவதால் நாய்களுக்கான கருத்தடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாய்கள்

பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு நிகரான செல்ல பிராணியாக நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தன்னை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடும் இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக நாய் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை..

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாலும், தடுப்பூசிகள் போடப்படுவதாலும் அவைகளால் பெரும்பாலும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

கருத்தடை திட்டம்

ஆனால் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல்வேறு சிரமங்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாகி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முன்பு கருத்தடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதாவது தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் பிடித்துச்சென்று அந்த நாய்களுக்கு கருத்தடை செய்து 'ரேபிஸ்' ஊசியையும் செலுத்தி சிறிது காலம் பராமரித்து பின்னர் பிடித்த இடத்திலேயே அவகைளை பத்திரமாக விட்டு விடுவார்கள். பிடிக்கப்பட்ட பெண் நாய்களின் கருப்பையை அகற்றி விடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது.

வீதிகளில் சுற்றி திரிகிறது

இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும், மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் எல்லாம் குறைந்தபட்சம் 3 நாய்கள் முதல் அதிகபட்சமாக 15 நாய்கள் வரை சுற்றி திரிவதை பார்க்கலாம்.

இந்த நாய்கள் வீதிகள், சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வீதிகள், சாலைகளில் நடந்து செல்வோரை விரட்டுவது, சில நேரங்களில் கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில் உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என தொடர்ந்து பொதுமக்களுக்கு நாய்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

துரத்துகின்றன

குறிப்பாக கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று வீதிகள், சாலைகளில் குறுக்கும், நெடுக்கும் ஓடுவதால் பலரும் அலறியடித்து ஓடுகின்றனர். இதனால் பலரும் நாய்களிடம் 'கடி' வாங்கிய சம்பவம் நிறைய நடந்துள்ளது. தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களால், சாலைகளில் செல்வோர் பயந்துகொண்டே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதுவும் இரவு நேரங்களில் நடந்து செல்வோரை மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் துரத்தி வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித்திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாய் கடித்துவிட்டால் உடனே ஊசி போட்டு கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் உயிரையே பறித்துவிடும். அதுவும் மிக கொடூரமாகவே அந்த மரணம் இருக்கும்.

எதிர்பார்ப்பு

இந்தநிலை உருவாகாமல் இருக்க நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது கால்நடைத்துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி தெரு நாய்களுக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்