ஏரிக்கரையில் பிணமாக கிடந்த கொத்தனார்

பணியின்போது வலிப்பு வந்தநிலையில் ஏரிக்கரையில் பிணமாக கிடந்த கொத்தனார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-06 17:31 GMT

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 37). கொத்தனார். இவருக்கு சஞ்சம்மாள்(28) என்ற மனைவியும், தனிஷ்(9) என்ற மகனும் உள்ளனர். செல்வகுமார் தனது கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களுடன் நேற்று முன்தினம் காலை செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு கான்கிரீட் போடும் வேலைக்கு சென்றிருந்தார். மதியம் செல்வகுமாருக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் வேலைக்கு செய்தார். அதனை தொடர்ந்து செல்வகுமார் மாலை 6 மணியளவில் சக தொழிலாளர்களிடம் செஞ்சேரி ஏரிக்கரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை. இதனால் சக தொழிலாளர்கள் ஏரிக்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு செல்வகுமார் இறந்த நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் செல்வகுமாரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்