ரூ.286 கோடி செலவில் சென்னை ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் 1,632 புதிய போலீஸ் குடியிருப்புகள்

சென்னை ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் ரூ.286 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்ட 1,632 புதிய போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.;

Update:2022-08-09 05:27 IST

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ரூ.186 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்ட 1,036 போலீஸ் குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த குடியிருப்புகளை திறந்துவைத்தார். பின்னர் 5 போலீசார் குடும்பங்களிடம் குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர், சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ரூ.100 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட 596 போலீஸ் குடியிருப்புகளை நேரில் திறந்து வைத்து 5 போலீசார் குடும்பங்களிடம் சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான ரூ.3 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி வரவேற்று பேசினார். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் எழிலன், பரந்தாமன், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குனர் சுனில் குமார் சிங், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் ரவி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உட்கட்டமைப்பு வசதிகள்

ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு திறப்பு விழா நிகழ்ச்சியில், மற்ற மாவட்டங்களில் கட்டப்பட்ட போலீஸ் நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.5 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 32 போலீஸ் குடியிருப்புகள், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போலீஸ் நிலையம், ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் போக்குவரத்து ஒழங்கு பிரிவு போலீஸ் நிலையம் என ரூ.3 கோடியே 73 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 போலீஸ் நிலைய கட்டிடங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம் என ரூ.4 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 போலீஸ்துறை கட்டிடங்கள், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளை சிறைச்சாலையில் ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், சென்னை மணலியில் 13 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள் திறக்கப்பட்டன.

உங்கள் சொந்த இல்லம்

திருப்பூர் மற்றும் அவிநாசி, கோவை மாவட்டம் பீளமேடு ஆகிய இடங்களில் ரூ.4 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், சென்னை மணலியில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை கட்டிடம், "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டம் பையூர் பிள்ளைவயல், சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கண்டம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.55 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் சீருடை பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் என மொத்தம் ரூ.378 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்