சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மின்கம்பம் மீது கார் மோதல்; முதியவர் பலி - 2 பேர் படுகாயம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூரில் மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் சென்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-09-21 09:32 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரங்கன் (வயது 63). இவர் தனது நண்பருடன் காரில் கடலூரில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தனர். கானத்தூர் பஸ் நிறுத்தம் அருகே காரில் வந்து கொண்டு இருந்தபோது, டிரைவர் வெங்கடேசன் தூக்க கலக்கத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மின்கம்பம் உடைந்து கீழே விழுந்ததில் கார் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜரங்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்ற 2 பேரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்