ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணுவ வீரர், குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

Update: 2023-01-23 18:45 GMT

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணுவ வீரர், குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

ராணுவ வீரர்

கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவரது கணவர் செந்தில்குமார் (41) ராணுவ வீரர். இவர்கள், உறவினர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி அறிவித்தனர். இதுகுறித்து அப்போதே கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் அளித்தோம். இதையடுத்து கட்டப்பஞ்சாயத்துகாரர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவர்கள் எங்கள் குடும்பம் உள்பட 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.

நடவடிக்கை

தற்போது, ஊர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்திற்கு தலா ரூ.500 வசூல் செய்தனர். இதில், எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர்த்து விட்டனர். இதுகுறித்து கேட்டதற்கு உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம். வேண்டுமானால் போலீசில் புகார் கூறுங்கள் என கூறினர். மேலும் திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் சென்றாலும் அவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர்.

எங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பள்ளிகளில் கூட பேசுவது இல்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவது இல்லை. எங்கள் குடும்பத்தினர், எல்லையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எங்கள் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்