கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயற்சி :கணவர் உள்பட 2 பேர் கைது

போடியில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது பெண்ணை காா் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-13 18:45 GMT

போடி அருகே உள்ள தேவாரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமாலா (வயது 38). இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணிமாலா வழக்கு தொடர்பாக போடி கோர்ட்டில் ஆஜராகுவதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து போடி பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மணிமாலா கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேஷ் தனது மனைவி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர், பாண்டித்துரை என்பவர் மூலம் மணிமாலை காரை ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ் மற்றும் கார் டிரைவர் பாண்டித்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்