பெரியநாயகி அம்மன் கோவிலில் திருட முயற்சி

ராமநத்தம் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் மர்மநபர்கள் திருட முயன்றனர்.

Update: 2023-07-31 18:45 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே அரங்கூர் வெள்ளாற்றங்கரையில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்ததும் வழக்கம்போல் பூசாரி ராமசாமி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ராமசாமி கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கோவிலுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளனர். ஆனால் கோவில் உண்டியலை சேர்களுக்கு அடியிலும், ஒரு பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை ஒரு அறையில் பழைய பெயிண்ட் டப்பாவில் கோவில் நிர்வாகத்தினர் மறைத்து வைத்திருந்ததால், அவை மர்மநபர்கள் கையில் சிக்கவில்லை. இதனால் நகை, பணம் ஏதும் கிடைக்காமல் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகி்ன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்