மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு பெற்ற 253 பேருக்கு பணிநியமன ஆணை

பிரதமரின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு பெற்ற 253 பேருக்கு பணிநியமன ஆணைகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி வழங்கினார்.

Update: 2022-11-22 18:45 GMT

பிரதமரின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு பெற்ற 253 பேருக்கு பணிநியமன ஆணைகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி வழங்கினார்.

பணி நியமன ஆணை

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 253 பேருக்கு மத்தியஅரசு பணிகளுக்கான ஆணை வழங்கும் விழா இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அச்சல்சர்மா தலைமையில் நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி 253 பேருக்கு மத்திய அரசு பணிகளுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவில் உள்ள மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவினை வளாச்சி பாதையிலும், முன்னேற்ற பாதையிலும் பிரதமர் வழிநடத்தி வருகிறார். கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னதாக பிரதமரால் அறிவிக்கப்பட்ட ரோஜ்கர்மேளா திட்டம், அனைவராலும் போற்றும் வகையில் பேசப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகளவில் உருவாக்கும் பொருட்டும் அரசு பணிகளில் அவர்களை பணியமர்த்தும் திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது.

71 ஆயிரம் இளைஞர்கள்

வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்து சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிகழ்ச்சி வாயிலாக மத்திய அரசு பணிகளான ரெயில்வே, தபால் துறை, வங்கி, போலீஸ், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கென தென்மாவட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களை சார்ந்த தோ்வு செய்யப்பட்டுள்ள 253 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 45 இடங்களில் 71,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிட பிரதமர் வழிவகை செய்துள்ளார்.

மேலும், கருமையோகி பிராரம்பா திட்டத்தினை தொடங்கி வைத்து, ஆன்லைன் ்ஒரியன்டேசன் கோர்ஸ் மூலம் பயிற்சிகள் வழங்கி, அதன் வாயிலாக பல்வேறு அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகையினையும் பிரதமர் ஏற்படுத்தி தந்துள்ளார். உலகளவில் பொருளாதார நாடுகளில் இந்தியா சிறந்து விளங்கிடும் வகையில் பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

பொருளாதார வளர்ச்சி

இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதுதவிர சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையிலும் அதற்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தொழில், வேலைவாய்ப்பு ஆகியவைகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கென பணிகளை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், ெரயில்வே கோட்ட மேலாளர் சங்கரன், இந்தோ திபத் எல்லைக்காவல் படை துணை கமாண்டெண்டுகள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்டுகள் ரோகித்குமார், ஜெயாஷ்குமார், மிருதுன்ஜெய்பேனர்ஜி, சுரேஷ்குமார், மதன்சிங் பண்டாரி, விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்