விசாரணைக்கு பயந்து மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவு-போலீசார் பின் தொடர்ந்த நிலையில் பரபரப்பு
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவானார். மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய சில மணி நேரங்களில் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
அடுக்கம்பாறை,
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவானார். மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய சில மணி நேரங்களில் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மானபங்க குற்றச்சாட்டு
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தியை சிலர் தாக்கி மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தாக்குதலில் காயம் அடைந்த கீர்த்தி சில நாட்களாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மானபங்கப்படுத்தப்பட்டதாக ராணுவ வீரரும் கீர்த்தியின் கணவருமான பிரபாகரன் புகார் அளித்த நிலையில் மகளிர் ஆணைய தலைவி குமாரி நேற்று மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். கீர்த்தியின் பாதுகாப்புக்கு மருத்துவமனையில் 2 பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் அடுக்கம்பாறை வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மனைவி கீர்த்தியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து கார் மூலம், மாலை 5 மணி அளவில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது உடன் 2 பெண் போலீசார் பாதுகாப்புக்காக ஸ்கூட்டியில் காரை பின் தொடர்ந்து சென்றனர்.
தலைமறைவு
கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து காரை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் வேலூர் நோக்கி சென்று மனைவி கீர்த்தியுடன் பிரபாகரன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து பெண் போலீசார் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் தலைமறைவான ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி கீர்த்தியை தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு பயந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவியது போல் தம்பதி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.