ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

எலச்சிபாளையம் அருகே ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-07 15:35 GMT

நாமக்கல்:

எலச்சிபாளையம் அருகே ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று காலை எலச்சிபாளையம் அருகே உள்ள கொன்னையார் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது ஆம்னி வேனில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1¼ டன் ரேஷன் அரிசியை ஆம்னி வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இது தொடர்பாக ரேஷன் அரிசியை கடத்தி வந்த மல்லசமுத்திரம் அருகே எம்.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் தனபால் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தனபாலை போலீசார் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்