சேலம்
சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவர் கடந்த மாதம் மூணாங்கரட்டை சேர்ந்த பெரியசாமி என்பவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்து லாட்டரி சீட்டு விற்பனை பற்றி போலீசாருக்கு எப்படி தகவல் தெரிவிக்கலாம்? என்று கூறி தாக்கினர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி இருந்ததும் கடந்த 2020-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய துணை கமிஷனர் லாவண்யா மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.