கஞ்சா போதையில் 2 என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்தோம்கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

மார்த்தாண்டத்தில் கஞ்சா போதையில் 2 என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்தோம் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2023-01-05 18:45 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டத்தில் கஞ்சா போதையில் 2 என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்தோம் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

2 என்ஜினீயர்கள் கடத்தல்

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின்குழி பகுதியை சேர்ந்தவர் ஷாஜன். இவருடைய மகன் ஜிஸ்னு (வயது 26). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

புத்தாண்டையொட்டி விடுமுறையில் இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். விடுமுறை முடிந்ததை தொடர்ந்து அவர்கள் பெங்களூரு செல்வதற்காக கடந்த 3-ந்தேதி மார்த்தாண்டம் மார்க்கெட்டுக்கு பின்பகுதியில் நடந்து வந்தனர். அப்போது அங்கிருந்த போதை ஆசாமிகள் 5 பேர் கத்தியை காட்டி பணம் கேட்டனர். அவர்கள் இல்லை என்றதும் இருவரையும் கடத்தி சென்று சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைபகுதிக்கு கொண்டு சென்று அவர்களிடமிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்களை பறித்தனர். மேலும் ஜிஸ்னுவின் தந்தைக்கு போன் மூலம் மிரட்டி ரூ5 ஆயிரத்தை கூகுள் பே மூலம் பறித்தனர்.

வாலிபர் கைது

அதன் பிறகு இருவரையும் அங்கேயே விட்டு, விட்டு 5 பேரும் தப்பி ஓடி விட்டனர். அதைத்தொடர்ந்து ஜிஸ்னுவும், சுர்ஜித்தும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேக் அப்துல் காதர் விசாரணை நடத்தி மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியை சேர்ந்த ஜெனால்டு (27) என்பவரை கைது செய்தார்.

அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சம்பவத்தன்று 5 பேரும் கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் இருந்தோம். அந்த சமயம் ஜிஸ்னு, சுர்ஜித் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய போது, பணம் இல்லை என்று கூறியதால் கடத்தி சென்று பணம் பறித்தோம் என்று ஜெனால்டு வாக்கு மூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை போலீசார் தீவிரம்

மேலும் இந்த கடத்தலில் முக்கிய பங்கு வகித்தது சையத் (26) என்பதும், தலைமறைவாக உள்ள 4 பேரும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து சையத் உள்பட 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்