தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-11 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா சவலாப்பேரியை சேர்ந்தவர் மீனா (வயது 30). இவர் நேற்று தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

போலீசார் விசாரணை

பின்னர் மீனா கூறும்போது, 'எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக எனது கணவருக்கு, அவரது தந்தை ஏற்கனவே பதிவு செய்து கொடுத்த நிலத்தை அவரது புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர். இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனது குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் அந்த நிலத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் மீனா மற்றும் அவரது கணவரை 2 குழந்தைகளுடன் விசாரணைக்காக சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்