1 பவுன் நகைக்காக மூதாட்டியை கொல்ல முயற்சி

உத்தனப்பள்ளி அருகே 1 பவுன் நகைக்காக மூதாட்டியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2022-08-13 17:44 GMT

ராயக்கோட்டை

மூதாட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டப்பா. இவருடைய மனைவி பில்லம்மா (வயது 91). கணவர் இறந்து விட்டதால் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியை தலையில் கட்டையால் தாக்கி விட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மலை பறித்த கொண்டு தப்பியோடினார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயத்துடன் இருந்த மூதாட்டியை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மூதாட்டியின் மகள் அக்கையம்மா உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் மகன் வெங்கடேசன் (21), என்பவர் மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கம்மலை போலீசார் பறிமுதல் செய்தனர். 1 பவுன் நகைக்காக மூதாட்டியை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்