கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

மக்கள் கூடும் கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-24 17:00 IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:

குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 78 தற்காலிக சோதனைச்சாவடிகள் மற்றும் 5 Highway Patrol, 7 Crime Control Patrol, 5 Emergency Response Patrol, 5 Four wheeler Patrol, 30 Mobile Patrol, 2 Tourist Patrol ஆகிய நான்கு சக்கர ரோந்துகள், 27 இருசக்கர வாகன ரோந்துகள் அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகை காலங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க சீருடை இல்லாத சாதாரண உடையில் போலீசார் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குற்றத்தடுப்பு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களும் தங்களது உடமைகள் நகைகள் ஆகியவற்றை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும், வெளியூர்களுக்கு செல்லும் போது தங்களது வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கூறியும் செல்ல வேண்டும்.

மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அனுமதி இல்லாமலோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாகவோ நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் பண்டிகை காலத்தினை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்