பச்சிளம் பெண் குழந்தையைரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர், உடந்தையாக இருந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-22 19:47 GMT

சிவகாசி, 

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர், உடந்தையாக இருந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரநேரி ஈசுவரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீசுவரன் (வயது 28). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்களுக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த மாதம் 23-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில், 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

விற்பனை செய்ய முடிவு

ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி இந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்துவந்த அஜிதா (34) என்பவருக்கு தெரியவந்தது. அவர், தனக்கு தெரிந்த ஒருவர் நாகர்கோவிலில் உள்ளதாகவும், அவரிடம் குழந்தையை கொடுத்தால், தேவையான பணம் கொடுப்பார் என்று கூறியதாக தெரிகிறது.

ரூ.40 ஆயிரம்

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் ஆகியோர் சிவகாசியில் இருந்து குழந்தையுடன் நாகர்கோவில் புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் நெல்லையில், வங்கி அதிகாரியான ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ஐரின் (42) ஆகியோரிடம் ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், மீண்டும் விருதுநகர் பாண்டியன்நகர் வந்து, பாலன் தெருவில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கி இருந்த போது பாண்டீசுவரன், பஞ்சவர்ணத்துக்கு இடையே குழந்தையை விற்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

5 பேர் கைது

அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரி ஜானகி, மாரநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காசியம்மாள் வழக்குபதிவு செய்து பாண்டீசுவரன், பஞ்சவர்ணம், நாகர்கோவிலை சேர்ந்த ஜார்ஜ், அவருைடய மனைவி ஐரின், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக மாரநேரி ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் அஜிதா, முத்துமாரி அம்மாள் (51) ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாண்டீசுவரன், பஞ்சவர்ணம், ஐரின், அஜிதா, முத்துமாரி அம்மாள் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்