மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் புதிய பாலம்

திருக்காட்டுப்பள்ளியில் மின்விளக்குள் எரியாததால் புதிய பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-08 19:47 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளியில் மின்விளக்குள் எரியாததால் புதிய பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பாலம்

தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி ஊராட்சி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு ேபாக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை, திருவையாறு, சமயபுரம், புள்ளம்பாடி லால்குடி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ் சென்று வருகின்றன. தினந்தோறும் ஏராளமான லாரிகளும், இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மிகுந்த போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பாலத்தில் இரு பகுதிகளிலும் பாலம் கட்டப்பட்ட போதே 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் விளக்குகள் பொருத்தப்பட்டன.

மின்விளக்குள் எரிவதில்லை

பாலம் திறந்து சில நாட்கள் மட்டுமே அதில் இருந்த விளக்குகள் ஒளிர்ந்தன.அதன் பின்பு பாலத்தில் உள்ள மின்சார கம்பங்கள் அடையாள சின்னங்களாக உள்ளனவே தவிர அதில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது .

பாலத்தில் உள்ள மின் விளக்குகளுக்கான மின் கட்டணத்தை பழமார்நேரி ஊராட்சி கட்ட வேண்டிய உள்ளதாகவும், அதிக ஒளி தரக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டதால் அதிக அளவு மின்சார நுகர்வு ஏற்படுவது என்பதால் சிறிய அளவிலான மின் விளக்குகளை ஊராட்சி சார்பில் பொருத்தப்பட்டு அவையும் எரிவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நடைபாதையில் மது அருந்துகின்றனர்

இந்த பாலத்தில் இரண்டு புறமும் நடைபாதை 1.5மீட்டர் அளவிற்கு உள்ளது. இதில் இரவு நேரங்களில் ஆங்காங்கே மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக அந்த வழியாக நடந்து செல்வோர் தெரிவிக்கின்றனர்.

இந்த பாலத்தின் அருகே திருக்காட்டுப்பள்ளி புதிய பஸ் நிலையம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அருகில் இந்த பாலம் உள்ளதால் இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகளை பேரூராட்சி வசம் ஒப்படைத்து, புதிய மின்விளக்குகள் அமைத்து ஒளிரச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்