தலையில் ரத்தக்காயத்துடன் ஆற்றில் மிதந்து வந்த வாலிபர் உடல்

தலையில் ரத்தக்காயத்துடன் ஆற்றில் மிதந்து வந்த வாலிபர் உடல்

Update: 2022-09-22 20:22 GMT

பட்டுக்கோட்டை அருகே தலையில் ரத்தக்காயத்துடன் வாலிபர் உடல் ஆற்றில் மிதந்து வந்தது. அவர் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தக்காயத்துடன் மிதந்து வந்த வாலிபர் உடல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமம் தளிக்கோட்டை பாலத்தின் அருகே கல்லணைக்கால்வாய் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் நேற்று காலை 9.30 மணி அளவில் ஒரு வாலிபரின் உடல் மிதந்து வந்தது. 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் உடலில் துணி எதுவும் இல்லை. தலையில் ரத்தக்காயத்துடன் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இடுப்பில் சிவப்பு நிற கயிறு மட்டும் கட்டி இருந்தார்.

கொலை செய்து வீசப்பட்டாரா?

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ஆற்றின் கரையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தலையில் ரத்தக்காயம் இருப்பதால் அவரை யாரேனும் அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிச்சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்