போக்குவரத்து மாற்றத்தால் பஸ், ஆட்டோ கட்டணம் உயர்வு

போக்குவரத்து மாற்றத்தால் பஸ், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-13 19:21 GMT

காவிரி பாலம் சீரமைப்பு

திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 10-ந் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக காவிரி பாலம் மூடப்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சென்று கும்பகோணம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் செல்லுமாறும், அதே வழியில் சத்திரம் பஸ் நிலையம் வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சில கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டண உயர்வு

இதனை ஈடு செய்வதற்காக தனியார் மற்றும் அரசு பஸ்களில் ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை உயர்த்தி பயணிகளிடம் இருந்து நேற்று முன்தினம் முதல் வசூல் செய்கின்றனர். பஸ்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்ல பயண கட்டணமாக ரூ.7 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.9 வசூல் செய்கிறார்கள். அதேபோல், மத்திய பஸ் நிலையத்திற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.11 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, அன்பில் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணமானது வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஆட்டோ, வாடகை கார்களிலும் கட்டணங்களை உயர்த்தி விட்டனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் முன்னறிவிப்பின்றி கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பஸ் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் நாள் காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை காவிரி பாலத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்