நீட் தேர்வு குறித்து சரியான புரிதல் இல்லை.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் தமிழிசை பதில்

நீட் தேர்வில் 'பூஜ்யம்' எடுத்தால் படிக்க முடியுமா? சரியான புரிதல் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் தமிழிசை பதில் அளித்துள்ளார்.

Update: 2023-09-21 09:50 GMT

புதுச்சேரி,

நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்யம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்கள், நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அவசியம்..

நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.

இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை. மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை. அத்தகைய இடங்கள் முழுமையாக நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் புரிதல் மிக அவசியம். நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம். இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்