மரத்தில் கார் மோதி பெண் சாவு

திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். காரில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-19 19:05 GMT

எலச்சிபாளையம்

ரிக் உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 51). இவர் ரிக் உரிமையாளர். இவரது மனைவி பூங்கோதை (45). இவர்களுடைய மகள் சவுமியா (27), மருமகன் அஸ்வந்த் (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகிறது. இந்தநிலையில் அவர்கள் 4 பேரும் ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை முத்துசாமியின் மருமகன் அஸ்வந்த் ஓட்டி உள்ளார். இந்தநிலையில் திருச்செங்கோடு-ஈரோடு ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால் கொக்கராயன் பேட்டை ரோடு வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பொம்மக்கல் பாளையம் அருகே ஒரு வளைவில் கார் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய கார் அஸ்வந்தின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலை ஓரம் உள்ள மரத்தில் வேகமாக மோதி நின்றது.

பெண் சாவு

இந்தநிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தலைகீழாக கிடந்த காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பூங்கோதை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த முத்துசாமி, சவுமியா, அஸ்வந்த் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார்.

மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்