மரத்தில் கார் மோதி பெண் சாவு

பள்ளிபாளையத்தில் மரத்தில் கார் மோதி பெண் பரிதாபமாகஇறந்தார்.

Update: 2023-03-04 18:40 GMT

பள்ளிபாளையம்

மரத்தில் கார் மோதியது

ஈரோடு பழைய பாளையத்தை சேர்ந்தவர் முத்து (வயது 52). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்திற்கு குலதெய்வம் கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மாலை 6 மணி அளவில் சங்ககிரி ரோட்டில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முத்துவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் காரை ஓட்டி வந்த ஈரோடு சங்கு நகரை சேர்ந்த ஜாபர் அலி (52), அவரது குழந்தைகள் முகமது சகிலா (15), ஆசிக் (13) ஆகிய 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சாவு

ஜாபர் அலியின் மனைவி பர்க்கத்து நிஷா (40) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக வந்தவர்கள் முத்து, ஜாபர் அலி, அவரது குழந்தைகள் முகமது சகிலா, ஆசிக் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து பர்க்கத்து நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்