ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 30), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ராஜீவ்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், மோகன், நேசமணி ஆகிய 3 பேரும் சுரேஷை வழிமறித்து, எதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறாய்? என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கீழே கிடந்த கல்லால் சுரேஷை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ் தூத்துக்குடி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், நாகராஜ் உள்பட 3 பேர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.